முகப்பு » சட்டம் » கான்ஸ்டிடியூஷன் ஆப்

கான்ஸ்டிடியூஷன் ஆப் இந்தியா (ஆங்கிலம்)

விலைரூ.1895

ஆசிரியர் : வி.கிருஷ்ணா ஆனந்த்

வெளியீடு: அட்லாண்டிக்

பகுதி: சட்டம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
உலகே போற்றும் மக்களாட்சி நடைமுறையை தாங்கி நிற்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மீது முழுமையான புரிதலை ஏற்படுத்தும் நுால். வரலாற்று பின்னணியை விளக்கும் மேற்கோள் களுடன் எளிய ஆங்கில நடையில் மலர்ந்துள்ளது. சட்ட விதிகளுக்கு உயிரூட்டப்பட்ட விதத்தை விவாத தகவல்கள் அடிப்படையில் தெளிவுபடுத்துகிறது.

இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டம் பிறப்பதற்கான கரு, உருக்கொண்ட பின்னணி தகவல்கள் கால அடிப்படையிலும், விடுதலை போராட்ட நிகழ்வுகளின் பின்னணியிலும் விவரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாடுபட்ட தலைவர்களின் கடும் உழைப்பை போற்றுகிறது. அரசியல் சட்ட உருவாக்க குறிக்கோள் மற்றும் வரைவு திட்டம் உருவான பின்னணியில் அமைந்த உழைப்பு விபரங்கள் இடம் பெற்றுள்ளன.

அரசியல் சட்டத்தின் அடிப்படை கோட்பாடு மற்றும் நடைமுறை விதிமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. சாதாரண மக்களும் அதிகாரம் பெறும் வகையில் அடிப்படை உரிமையை சட்டமாக்கியுள்ளதன் சிறப்பு, சிறுபான்மை நலன் குறித்த பொறுப்புகளை அலசுகிறது. ஆரம்ப கட்டத்தில் சட்ட வரைவு எப்படி உருவானது என விளக்கி, அது சார்ந்து நடந்த விவாத கருத்துகளையும் முன்வைத்துள்ளது.

அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய போது நடந்த விவாதங்கள், எக்காலத்துக்கும் ஏற்ற வகையில் அவை செழுமைப்படுத்தப்பட்ட முனைப்பு பற்றி முழுமையாக எடுத்துரைக்கிறது. தொடர்ச்சியாக அரசியல் அமைப்பு சட்டங்களில் இதுவரை செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், அவற்றின் பின்னணியில் அமைந்திருந்த தேவைகள், அது தொடர்பான விவாதங்கள் தக்க மேற்கோள்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிறந்து, வளர்ந்து, செழுமைப்பட்டுள்ளதை தெளிவான வரலாற்று பார்வையுடன் முன்வைக்கிறது. சட்ட விதிகளை உருவாக்கிய போது ஏற்பட்ட விவாதங்கள், அதன் பின்னணியில் அமைந்திருந்த நிகழ்வுகள், திருத்தங்களுக்கான முனைப்பு, தேவைகள், நடைமுறை சிக்கல்களை நிவர்த்திக்கும் வகையில் நீதிமன்றம் வழங்கிய ஆலோசனைகள், விளக்கங்கள், தீர்ப்புகளை உள்ளடக்கியுள்ளது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாகி, 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஏற்பட்டு வரும் மாற்றங்களை துல்லியமாக பதிவு செய்துள்ளது.

இந்த புத்தக ஆசிரியர் டாக்டர் வி.கிருஷ்ணா ஆனந்த், சிக்கிம் பல்கலைக்கழக சமூக அறிவியல் கல்விப் பிரிவு முதல்வராக பதவி வகிக்கிறார். டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நவீன மற்றும் சமகால இந்திய வரலாறு, இந்திய அரசியலமைப்பு வரலாறு சார்ந்த அக்கறையுடன் செயல்பட்டு வருபவர்.

சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் இந்திய அரசியல் நிலை, இந்திய அரசியல் சட்டம் ஏற்படுத்திய சமூக புரட்சி மற்றும் சுதந்திர இந்தியாவில் பத்திரிகைகளின் நிலை குறித்து புத்தகங்கள் எழுதியுள்ளார். அந்த வரிசையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வரலாற்றையும், மாற்றங்களையும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த நுால், அவரால் உருவாக்கப்பட்டு உள்ளது.

– அமுதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us